Perambalur: Fire accident; Omni bus catches fire and is damaged!

பெரம்பலூர் அருகே இன்று காலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து பெரம்பலூர், திருச்சி வழியாக மதுரைக்கு தனியாருக்கு சொந்தமான ஸ்லீப்பர் கோச் ஆம்னி பஸ் ஒன்று அதிகாலை 23 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வி.களத்தூர் பிரிவு பாதை பகுதியில் இன்று காலை 5:30 மணி அளவில் சென்ற போது திடீரென பேருந்தின் முன் பகுதியில் புகை வந்தததால், சாலை ஓரமாக நிறுத்திய ஆம்னி பஸ் டிரைவரான மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த இப்ராஹிம்(63) என்பவர் பயணிகளை அவசரமாக கீழே இறக்கி உள்ளார். அதற்குள் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்து முழுவதும் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்ததால் வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். அதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து எலும்பு கூடாக மாறியது. விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பு நிலவியது.
ஆம்னி பஸ்கள் அடிக்கடி தீப்பிடித்து எரியக்காரணம் முறையான ஆயில், டிஸ்க் மற்றும் பிரேக், டயர் பராமரிப்பு இல்லாமல் இருந்தாலும், அல்லது அளவிற்கு அதிகமான நேரம் இயக்குவதும் கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முறையாக பராமரிப்பு செய்து ஆம்னி பஸ்கள் தங்களை நம்பி வரும் பயணிகளை பத்திரமாக ஊரில் சென்று இறக்கிவிடும் வகையில் முறையான பராமரிப்பை உரிய காலத்தில் செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497