Perambalur: Government’s Pongal gift package; Collector presents and inaugurates it!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை இன்று (09.01.2025) சென்னையில் தொடங்கி வைத்ததை, தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி சாலையில் உள்ள சமத்துவபுரம் அமராவதி நியாய விலைக் கடையில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு 09.01.2025 முதல் 12.01.2025 முடிய அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை 9.00 மணி முதல் 1.00 வரையிலும் பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 வரையிலும் பகுதி வாரியாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. விடுப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.01.2025 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளில் மின்னணு குடும்ப அட்டையுடன் குடும்ப அட்டைதாரரோ அல்லது அந்த குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள யாரேனும் ஒருவரோ தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாய விலைக்கடைக்குச் சென்று தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன், நகராட்சீ வார்டு கவுன்சிலர் சிவக்குமார் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.