Perambalur: Kathayi Amman Street Walk in Nattarmangalam; Chariot and Thimithi Festival tomorrow!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் திருக்கோயிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி வடக்கிமலை அடிவாரத்தில் உள்ள கொடுவாய் தீட்டி பாறையில் குடி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
திருவிழா நாட்களில், தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வீதியுலா நடந்தது. இன்று மதியம் காத்தாயி சுவாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கோயில் வளாகத்தில் தொடங்கி மாவலிங்கையார் இல்லத்திற்கு வந்தது. பின்னர் இரவு பெருமாள் கோயில் முன்பு வீதி உலா தொடங்கி முக்கிய வீதியின் வழியாக சென்று மன்னார் ஈஸ்வரன் கோயிலை சென்றடைந்தது. உலாவின் போது பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, நாளை 29ஆம் தேதி மாவிளக்கு, பொங்கல் பூஜையும், மதியம் 1.30 மணிக்கு மேல் திருத்தேரில் ஸ்ரீ பச்சாயி, ஸ்ரீ காத்தாயி, ஸ்ரீ பூவாயி அம்மன் சுவாமிகள் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை 4.40மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை மஞ்சள் நீராடுதல் மற்றும் குடிவிடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் சுவாமி வழிபாட்டு குடிமக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497