Perambalur private bus workers who came to hand over the thief to the police station and took him back!
பெரம்பலூரில், தனியார் பஸ் தொழிலாளர்களின் போனஸ் பணத்தை திருடியவனை சி.சி.டிவி கேமரா மூலம் கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்க வந்த போது, போதிய போலீசார் இல்லாததால் திருப்பி அனுப்பபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் தனியார் பேருந்து தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் பஸ்சில் வைத்து விட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தீபவளிக்கு 2 நாட்கள் முன்னர், கீழே இறங்கி டீ குடிக்க சென்று விட்டனர். அப்போது போனஸ் பணம் காணமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், பஸ்சில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்த போது திருடனை அடையாளம் கண்டனர். இது குறித்து பெரம்பலூர் போலீசிலும் புகார் கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில், இன்றும் அதே திருடன் அதே பஸ்சில், கண்டக்டர், டிரைவர் டீ குடிக்க சென்ற உடன் திருட முயன்றதை கண்ட கண்டக்டர், டிரைவர் உடனே ஓடி வந்து, அவனை கையும் களவுமாக பிடித்து, பெரம்பலூர் போலீசில் ஒப்படைக்க அழைத்து வந்தனர். ஆனால், ஸ்டேசனில், போதுமான போலீசார் இல்லாத காரணத்தால், திரும்ப அழைத்து செல்லுமாறு ஆலோசனை வழங்கினர்.
மனம் நொந்து போன தொழிலாளர்கள் கண்டுபிடித்து கொண்டு வந்த திருடனை திரும்ப அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேசனை விட்டு வெளியேறினர். மேலும், எதிரே இருந்து டீ கடையில் திருடனுக்கும் டீ வாங்கி கொடுத்து காத்து கிடந்தனர். வேறு மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட கண்டக்டர் வரும் வரை காத்திருந்து அவரிடம் ஒப்படைத்து விட்டு மற்ற தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.
திருடன் அவர்கள் கூப்பிட்ட இடங்களுக்கு அமைதியாக நடந்து சென்று கொண்டு இருந்தான். அந்த திருடன் மீது வெவ்வேறு காவல் நிலைங்களில் பல வழக்குகள் இருப்பதால் சேலம், நாமக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்டான்.
பெரம்பலூரில் பல திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து, நடந்த வண்ணம் இருக்கிறது. போலீசாரும் சில வழக்குகளில் களவு போனதை மீட்டு ஒப்படைத்து வருகின்றனர். ஆனால், இன்று ஆர்.எஸ்.எஸ் பேரணிக்காக, சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஐ.ஜி, டி.ஐ.ஜி, மற்றும் 2 மாவட்ட எஸ்பிக்களும், பணிபுரிந்த நிலையில், ஒரு திருடன் எந்த பயமுமின்றி ஹாயாக சென்ற சம்பவம் பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.