Perambalur: Protest demanding an increase in milk procurement prices across various villages in the district!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தாங்கள் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்பந்தட்டையில் இன்று காலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு பாலை கொண்டுவந்த பால் உற்பத்தியாளர்கள் எங்களுக்கு அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை மிகவும் குறைவு என்றும், கறவை மாடுகளுக்கான தீவனங்கள் மற்றும் பராமரிப்பு செலவு பன்மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் பாலுக்கான கொள்முதல் விலையாக அரசு அறிவித்துள்ள லிட்டருக்கு ரூ 3 என்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும்
பால் கொள்முதல் விலையை அரசு லிட்டருக்கு ரூ 10 உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி தாங்கள் கொண்டு வந்த பாலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஊற்றாமல் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டையில் பால் கொள்முதல் நிலையம் அருகே சாலையில் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பாலை சாலையில் ஊற்றினர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், எசனை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தியதால் பால் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!