Perambalur: Public teaches private buses a lesson by driving them 2 km in reverse for failing to drop passengers at the stop!

பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலத்தில் பஸ் நிற்காது என கூறி பெண் பயணியை இறக்கி விட மறுத்த 3 தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ளது நாரணமங்கலம் கிராமம். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிராமத்தில் மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தனியார் மற்றும் அரசு பஸ்கள் சர்வீஸ் சாலை வழியாக கீழே வராமல் பாலத்தின் மேலேயே சென்றன. இதனால் நாரணமங்கலம் பஸ் ஸ்டாப்பில் இருந்து நிற்கும் பயணிகள் மாணவர்கள், மருத்துவமனைகளுக்கு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட செல்ல முடியாமலும் கடும் பாதிப்புக்குள்ளாவதாகவும், விவசாய விளைபொருட்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமலும், கலெக்டர், RTO மற்றும் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஆகியோரிடத்தில் ஏற்கனவே பலமுறை புகார் தெரிவித்திருந்னர். ஆனால் அதன் பின்னரும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பஸ்கள் தொடர்ந்து நாரணமங்கலம் பஸ் ஸ்டாப்பிற்கு வராமலேயே மேம்பாலத்தின் மேலே செல்கின்றன. இந்நிலையில் இன்று திருச்சியில் இருந்து நாரணமங்கலம் செல்ல பெண் பயணி ஒருவர் K.B.S என்ற தனியார் பஸ்சில் பயண சீட்டு கேட்டுள்ளார். ஆனால், பஸ் கண்டக்டர் நாரணமங்கலத்தில் பஸ் நிற்காது, அதனால், ஆலத்தூர் கேட்டில்லோ, அல்லது விஜயகோபாலபுரத்தில் இறங்கிக் கொள்ள தெரிவித்துள்ளார். ஆனால் பெண்பயணியோ நான் நாரணமங்கலத்தில் தான் இறங்குவேன் என கூறியதையும் கேட்காமல், விஜயகோபாலபுரத்திற்கான டிக்கட்டை அந்த பெண்மணியிடம் நடத்துனர் கொடுத்துள்ளார். உடனே, பஸ்சில் பயணித்த அந்த பெண்மணி பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினிக்கு போன் செய்துள்ளார். ஆனால், கலெக்டர் சார்பில் யாரும் வழக்கமாக போன் எடுக்கவில்லை.

உடனடியாக அந்த பெண் பயணி நாரணமங்கலத்தில் உள்ள தனது கணவர் உள்ளிட்ட கிராம மக்களிடம் இந்த விசயத்தை தெரிவித்ததுடன், தானும் அந்த பஸ்சில் வந்து கொண்டிருப்பதையும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, நாரணமங்கலத்தை சேர்ந்த 25-க்கும் பொதுமக்கள் நாரணமங்கலம் மேம்பாலத்தின் முடிவுப் பகுதியான விஜயகோபாலபுரம் பகுதிக்கு சென்று பஸ்சை மடக்கி சிறை பிடித்தனர்.

பின்னர், பஸ் ஓட்டுநர் நடத்துனரிடத்தில் நாரணமங்கலத்தில் தொடர்ந்து பஸ் நின்று செல்லும் என உங்களது பஸ் உரிமையாளர் வந்து எழுதி கொடுத்தால் தான் பஸ்சை விடுவோம் என தெரிவித்தனர். இதனால் செய்வதரியாது தவித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் இனி பஸ்கள் தொடர்ந்து நாரணமங்கலத்தில் நின்று செல்லும் என தெரிவித்தனர்.

இதனை அடுத்து கிராம மக்கள் பயணியை இறக்கி விடாமல் பாலத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சை பின்னாலேயே 2 கிலோமீட்டர் தூரம் இயக்க செய்து நாரணமங்கலம் சர்வீஸ் சாலைக்கு சென்று பெண் பயணியை இறக்கி விட்டால் தான் பஸ்சை விடுவோம் என தெரிவித்தனர்.இதனை அடுத்து பஸ்கள் பின்னாலேயே சென்று பயணியை நாரணமங்கலம் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு சென்றது. இந்நிலையில் SKR @ பத்மாவதி மற்றும் EVS @ சுமதி என்ற தனியார் பஸ்களும் தொடர்ந்து நாரணமங்கலத்திற்கு வரும் பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்லாமல் இருந்த நிலையில் அதனையும் சிறை பிடித்தனர். உடனே, அந்தப் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் இனி பஸ் நாரணமங்கலத்தில் நின்று செல்லும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் பஸ்களை மேம்பாலத்தில் பின்னாலேயே இயக்கச் செய்து சர்வீஸ் சாலை வழியாக நாரணமங்கலம் சென்று அந்த பஸ்களும் பின்னர் பெரம்பலூர் சென்றன. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

( தமிழ்நாடு அரசு கலெக்டருக்கு வழங்கிய 9444175000 போனில் யாராவது, பொதுவான கோரிக்கை வைத்தால் அந்த போன் அழைப்பை ஏற்பதில்லை. அப்படி ஏற்றாலும், ஸ்பீக்கர் போட்டு பேசுகீறீர்கள் என துண்டிப்பது வாடிக்கையாக உள்ளது என பொதுமக்கள் கலெக்டர் மீது குற்றம் சாட்டுகின்றனர். கலெக்டர் அறிவுறுத்தியும் போக்குவரத்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாததால் பொதுமக்களே போராடும் நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளனர்.)


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!