Perambalur: The Collector immediately provided a subsidized vegetable cart to a woman who had filed a petition for livelihood!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக, திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நடைபெறும். கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில், பாண்டகபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கணவர் இறந்து விட்டதாகவும், மகனும் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாகவும், வாழ்வாதாரமின்றி வறுமையில் சிரமப்படுவதால் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது கடனுதவி, சிறுதொழில் உதவி செய்து தருமாறு மனு அளித்தார்.
மனுவை பரிசீலித்த கலெக்டர் அருண்ராஜ் தோட்டக்கலைத் துறை வாயிலாக உடனடியாக தினசரி வருமானம் ஈட்டும் வகையில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டியினை மானியத்தில் வழங்கிட உத்தரவிட்டார். இதற்கான ஆணையினை தோட்டக்கலைத்துறையினர் தயார் செய்ததையடுத்து, கலெக்டர் அந்த பெண்ணுக்கு ஆணையினை வழங்கினார். ஒரு வார காலத்திற்குள் காய்கனி விற்பனைக்கான வண்டியினை பயனாளிக்கு வழங்கிடவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
அதேபோன்று கடந்த வாரம் 11.08.2025 அன்று கிராம பொதுமக்கள் சார்பாக மரவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர் மறவநத்தம், என்.புதூர், நெய்க்குப்பை, தொண்டபாடி கிராமங்களுக்கு 7 மணிக்கு மேல் வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூருக்கு பேருந்து சேவை இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாகவும், இரவு நேர பணிக்கு செல்பவர்கள் வெளியூர் செல்பவர்கள் மற்றும் அவசர தேவைக்காகவும், வெளியே செல்ல முடியாமல் இருந்ததாகவும், இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக பேருந்து சேவை வழங்கி உதவிடுமாறு கலெக்டரிடம் மனு அளித்தார். இம்மனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, போக்குவரத்து மற்றும் மினசாரத்துறை அமைச்சர் சிவசங்கரின் உத்தரவின்படி இரவு நேரப்பேருந்து சேவை இப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, மனுதாரர் பச்சமுத்து நன்றி தெரிவித்து மனு ஒன்றை இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தார். அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497