Perambalur: Tipper lorry carrying gravel without a permit seized!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார சுற்றுப் பகுதிகளில் லாரிகளில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி செல்லப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்க துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தெரணி-பாடாலூர் செல்லும் சாலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் தமிமுல் அன்சாரி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் 6 யூனிட் கிராவல் மண் இருந்தது. பின்னர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தெரணியில் இருந்து சட்டவிரோதமாக அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி கடத்தி வந்தது தெரியவந்தது. ஆனால், எந்த இடத்தில் இருந்து, யாருக்காக கடத்தி செல்லப்பட்டது என்பது தெரியவில்லை. இதையடுத்து கிராவல் மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியை கைப்பற்றி விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இதே போல் பாடாலூர், இரூர், திருவளக்குறிச்சி, தெரணி, நாட்டார்மங்கலம், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் கிராவல் திருட்டில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிராவல் மண் கடத்தலை தடுக்க தனிப்படை அமைத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497