Property affair near Perambalur, scenes of relatives being attacked with weapons; Viral on the Internet: Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடலூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜின் 2வது மனைவியின் மகன் பெருமாள் (வயது 53), விவசாயியான இவருக்கு, 3 ஏக்கர் 50 செண்ட் பூர்வீக நிலம் உள்ளது.
இந்நிலையில் பெருமாளின் தந்தை கோவிந்தராஜின் முதல் மனைவியின் மகள் பட்டுரோஜா (வயது 70), என்பவர் பூர்வீக சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று தனது கணவர் பெரியசாமி, மகன்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, தம்பி பெருமாளிடம் கடந்த சில வருடங்களாக தகராறு செய்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 1987ஆம் ஆண்டு பெருமாளின் தந்தை ஊர் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் இரு தரப்பினரும் பேசி செட்டில்மெண்ட் செய்து பட்டுரோஜாவிற்கும் சொத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று ஆவணங்கள் எழுதி கொடுத்துள்ளதால், சொத்தில் பங்கு கேட்க கூடாது என பெருமாளின் தந்தை கோவிந்தராஜ் தெரிவித்து சொத்தை மகன் பெருமாளுக்கு எழுதி கொடுத்து விட்டதாக தெரிகிறது.
அதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாத பட்டுரோஜா மற்றும் அவரது கணவர் பெரியசாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தார் தொடர்ச்சியாக பெருமாளிடம் தகராறு செய்து வந்த நிலையில் இன்று பெரியசாமி மற்றும் அவரது மகன் சுகனேஷ் (வயது 23), வழக்கம் போல் வயலுக்கு சென்று அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை குவியலாக மாற்றி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வயலுக்கு சென்ற பெரியசாமி மற்றும் மகன்கள் நல்லுசாமி, உமாநாத், பிரபாகரன் மற்றும் மருமகள் வெண்ணிலா ஆகிய 5 பேரும் சேர்ந்து நிலப்பிரச்சினை தொடர்பாக பேசி வீண் வம்பு இழுத்து உருட்டு கட்டை, தடி, குச்சி, மண்வெட்டி, அரிவாளுடன் பெருமாளையும் அவரது மகன் சுகனேஷையும் துரத்தி சென்று சரமாரியாக கொலை வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் தலைப்பகுதியில் படுகாயமடைந்த பெருமாள் 50 தையல் போடப்பட்ட நிலையிலும், சுகனேஷ் லேசான காயங்களுடனும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்திற்காக உறவினர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் படங்களாகவும், காணொளியாகவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.