Tamil Nadu Chief Minister Palanisamy’s speech at MGR Centenary Celebration at Perambalur

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பெரம்பலூரில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்குகிறேன்.

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல சிறப்புகள் உள்ளன. சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் கோவில், செட்டிகுளம் பாலதண்டாயுத பாணி கோயில்,
போன்ற பல தெய்வத்திருத்தலங்களை கொண்டு ஆன்மீக மணம்கமழும் பூமியாகவும் பெரம்பலூர் மாவட்டம் திகழ்கிறது. ரஞ்சன்குடிகோட்டை, சாத்தனூர் கல்மரம், போன்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் பல இடங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளன.

இப்படி பல பெருமைகளைப் பெற்றிருக்கும் இந்த மாவட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கு நிகராக பொருளாதார அளவில் சிறந்த மாவட்டமாக உருவாக்க மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல திட்டங்களை தீட்டினார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தின் மீது மாண்புமிகு அம்மா அவர்களுக்கு தனிக்கருணையும், பாசமும் இருந்தது. அதற்கு காரணம் இருக்கிறது. உலகில் வாழும் அத்தனை தமிழர்களும்
மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்களை ‘அம்மா’ என்று அழைத்தாலும் தமிழ்நாட்டுக்கு தன்னிகரற்ற தாயாக அவர் விளங்கினாலும்.. பெரம்பலூர் மாவட்டத்தை பெற்றெடுத்த
பெருமை மிக்க தாய் அவர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் 1995 நவம்பர் 1ம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரித்து பெரம்பலூரை புதிய மாவட்டமாக
உருவாக்கிய தாய்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதல்முதலாக வந்த தமிழ்நாடு முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.
மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்கள் பட்டதும்தான் பெரம்பலூர் மாவட்டம் புதுப்பொலிவைப் பெற்றது.

விவசாயத்திலும் தொழில் வளர்ச்சியிலும் இந்த மாவட்டம் முன்னேறத் தொடங்கியது. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்திற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் மேற்கொண்ட ஒரு சில திட்டங்களை குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளேன்.

பெரம்பலூர் மாவட்டம் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 736 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில் பெரும்பான்மை மக்கள் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். எனவே, பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தையே நம்பி இருக்கிறது. அதனால்தான் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த மாவட்டத்தின் மீது அதிக அக்கறை
எடுத்துக் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

அவற்றுள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சின்ன வெங்காய சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம், முன்னோடி மாவட்டமாகத் திகழ்கிறது.
இம்மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் பயிரிடப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, சின்னவெங்காய விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக, செட்டிகுளம் வெங்காய வணிக வளாகம், 27.6.2014 அன்று
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த இவ்வணிக வளாகத்தில் இதுவரை ரூபாய் 4 கோடியே 39 இலட்சம் மதிப்பில்
2,243 டன் சின்ன வெங்காய பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 10,348 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசால் 2012-13ம் ஆண்டு முதல் பெரம்பலுhர் மாவட்டத்தில் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 350 கறிக்கோழிப்பண்ணைகள் மற்றும் 215 நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவப்பட்டுள்ளன. இதற்காக ரூ.8.74 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டடுள்ளது.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க தொடங்கப் பெற்ற பல திட்டங்கள் அம்மாவின் அரசால் முடிக்கப்பெற்று, பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும்
கடந்த மார்ச் மாதத்தில் 85 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக, பாடலூரில் 36 கோடியே 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தினசரி 1 இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட நவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய
பால் பண்ணை திறந்து வைக்கப்பட்டது.

தற்போது, செட்டிக்குளம் வணிக வளாகத்தில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சின்னவெங்காய மதிப்புகூட்டு மையம் அமைத்து, இம்மாத இறுதியிலிருந்து இயங்கும் நிலையில் உள்ளது.

இதனால், பெரம்பலூர் மாவட்ட மக்காச்சோளம் மற்றும் சின்னவெங்காய உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் தங்களது சின்ன வெங்காயத்தினை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்து லாபம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 4 கோடியே 82 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்நிலைப்பள்ளிக் கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்படுகின்றன.

அதைப்போல 11 கோடியே 44 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குன்னம் மற்றும் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் சார்நிலைக்கருவூலக் கட்டடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

77 கோடியே 41 இலட்சத்து 94 ஆயிரத்து 834 ரூபாய் மதிப்பீட்டில் 9 ஆயிரத்து 102 பயனாளிகள் பயன்பெறும் வகையிலான நலத்திட்டங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மேலும் பல திட்டங்களைக் கொண்டுவர இந்த அரசு தயாராக இருக்கிறது.
உங்களுக்கெல்லாம் புது நம்பிக்கையையும், புத்துணர்வையும் ஏற்படுத்துவதற்காகத்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா இங்கு சீரும் சிறப்புமாக
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் கடந்துவந்த பாதையையும், அவர் எட்டிய சாதனை சிகரத்தையும், அவர் ஏழைகளுக்காக தீட்டிய திட்டங்களையும், இந்தத் தலைமுறை இளைஞர்களும் குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டுவிழா மாவட்டந்தோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்று மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது பாடல் வரிகள் மூலம் கேள்வி கேட்பார். அந்தக் கேள்விக்குப் பதிலும் மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள்தான். காலங்கள் கடந்தும் மக்களின் மனதில் நிலையாக நிற்கக்கூடிய வெகு சிலரில்
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் ஒருவர்.

கிராமப் பகுதிகளில் தேர்தல் நேரத்தில், “”””நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள்?”” என்று கேட்டால், “”””எம்.ஜி.ஆர். அவர்களுக்குத்தான் வாக்களித்தேன்”” என்று கூறும் முதியோர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

அரசின் சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கினால், “”””மகராசன் எம்.ஜி.ஆர். கொடுத்த வேட்டி சேலை”” என்று கூறும் முதியோர் இன்றைக்கும்
இருக்கிறார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஓர் பெண் எம்.ஜி.ஆராக தமிழ் நாட்டிற்கு கிடைத்தவர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக தீட்டி இருந்த திட்டங்களை செவ்வனே செயல்படுத்தியவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

மாண்புமிகு புரட்சித்தலைவர் வழியில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும் முன்னோடி திட்டங்கள் பலப்பல தந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.
இந்த மகத்தான இரண்டு தலைவர்களுமே இறைவன் அருளால் தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரம், கொடை. இதை எதிர்க்கட்சிக்காரர்களே ஒத்துக் கொள்வார்கள்.

மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்களும், மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்களும் அரசியலுக்கு வருவதற்கு முன்பு திரை உலகில் இருந்துகொண்டு மக்களுக்கு ஆற்றிய பணிகள்தான் அவர்களை மக்கள் தலைவர்களாக உருவாக்கியது. இரண்டு தலைவர்களுமே உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்கள்.
திறந்த இதயத்தோடு, மலர்ந்த முகத்தோடு, சுயநலம் சிறிதும் இல்லாமல் மக்களுக்காகவே உழைத்தார்கள், மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார்கள்.

அதனால்தான், மறைந்தும் மறையா வரம் பெற்று மக்கள் மனத்தில் நேற்றும், இன்றும், என்றும் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள்.

மக்கள் மனத்திலிருந்து எந்த சக்தியாலும் இரண்டு தலைவர்களையும் பிரிக்கவே முடியாது. அவர்களுடைய நினைவுகள் மக்கள் மனத்தில் உள்ளவரை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியதைப் போல ..ஷ

இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிலைத்து நிற்கும்.

மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திடீரென்று ஒரு அரசியல் தலைவராக உயரவில்லை. மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திறந்த இதயத்திற்குள் தமிழகத்தின் மக்கள் அன்புடனும், பாசத்துடனும் நுழைந்து குடிகொண்டவர்கள். அதனால்தான், குடியிருந்த கோயில் என்று மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் இதயத்தைத்தான் நாம் நினைக்கத் தோன்றுகிறது.

மக்கள் திலகம் பிரபலமான நடிகரான பிறகு அவருக்கென தனிப்பாடல்கள் இல்லாமல் படங்கள் வெளியானதில்லை. அவரது திரைப்படப் பாடல்களில் வசனங்களில் ஒரு தீர்க்கதரிசியைப் போல் எதிர்காலத்தில் தன் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையாக தெரிவித்தார்.

“”””நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?”” என்று தீர்க்கதரிசி நமது மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள்
அன்றே சொன்னார்கள்.

திரையுலக சக்கரவர்த்தியாக மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆற்றிய சாதனைகளை இதுவரை யாரும் முறியடிக்க முடியவில்லை. மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள், தனது திரை வாழ்க்கையிலேயே ஒரு மகத்தான தலைவருக்குரிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருந்தார்.

ஓட்டுவங்கிக்காக செயற்கையான குணங்களை அவர் பெற்றிருக்கவில்லை. இயற்கையாகவே அவருக்கு தொண்டு உள்ளமும், வள்ளல் தன்மையும் அமைந்திருந்தது என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம் என்றாலும்,

ஒருசில உதாரணங்களை இங்கே நினைவுகூர விரும்புகிறேன்.

புரட்சித் தலைவர் அவர்கள் திரைவாழ்வில் தன் சக நடிகர்களின் இன்ப துன்பங்களில் தானும் பங்கெடுத்துக் கொள்வார்.
நடிகர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான்.

சுயவாழ்வில் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாலும், வெண்திரையில் ரசிகர்களை சிரிக்க வைக்கிற பல நடிகர் நடிகைகளை இனமறிந்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர் புரட்சித்தலைவர் அவர்கள். பொருளாதாரத்தால், நெருக்கடியைச் சந்தித்த பல நடிகர்களுக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்து அவர்களை தன்னிறைவு அடையச் செய்து மகிழ்ந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுக்காக “”””பைத்தியக்காரன்”” என்ற படத்திலும் நடிகை கண்ணாம்பாவுக்காக “”””தாலிபாக்கியம்”” என்ற படத்திலும்
நடிகர் அசோகனுக்காக “”””நேற்று இன்று நாளை”” என்ற படத்திலும் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனுக்காக “”””நவரத்தினம்”” என்ற படத்திலும்
சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட தன்னலமற்ற ஒரு நடிகரை, ஒரு தலைவரை தமிழ்நாடு பெற்று தழைத்து ஓங்கியது.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்காக “”””தாய் மகளுக்குக் கட்டிய தாலி”” என்ற படத்தை மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள் நடித்துக் கொடுத்தார்கள்.
காரணம், பேரறிஞர் அண்ணா அவர்கள், அப்பழுக்கற்ற ஒரு அரசியல்வாதி.

அரசியல்தான் ஒரு நாட்டின் ஆணிவேர் என்று மக்களை நம்ப வைத்த ஒரு பகுத்தறிவு வாதி.. என்பதால் அண்ணா அவர்களுக்காக ஓடி ஓடி உழைத்தவர் மாண்புமிகு
புரட்சித்தலைவர் அவர்கள்.

இன்னொரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன். சென்னை தி.நகர். வெங்கடாசலபதி கோவிலின் பின்புறம் எம்.ஜி.ஆர். அவர்களுக்குச் சொந்தமான அப்பு பங்களா இருந்தது. அந்த இடம்

திரு.வி.கே.ராமசாமிக்குச் சொந்தமானது. அந்த இடத்தை அந்தக்காலத்தில் 4 லட்சம் ரூபாய்க்கு திரு.வி.கே.ராமசாமி அவர்கள் மாண்புமிகு புரட்சித்தலைவருக்கு விற்றார். பல ஆண்டுகள் ஆனது. அதன் மதிப்பு பல கோடி ஆனது. ஆனால், அந்த நேரம் மாண்புமிகு புரட்சித்தலைவர் திரு. வி.கே.ராமசாமியை அழைத்து இப்போது இந்த இடம் பலகோடி மதிப்புப் பெறும். ஆனால், நீங்கள் பழைய விலையான 4 இலட்சம் ரூபாய் கொடுத்து இதை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்று பிடிவாதமாகக் கூறினார்.

மாண்புமிகு புரட்சித்தலைவருடைய பெருந்தன்மையையும் தாராள மனதையும் கண்டு திரு.வி.கே.ராமசாமி அவர்கள் மனம் நெகிழ்ந்து போனார்.

மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் பொதுமக்களுக்கு வாரிவழங்கிய சில நிதியுதவிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1960களில் சென்னை, தஞ்சை, மதுரையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, நிவாரணமாக 85 ஆயிரம் ரூபாயும், 5 ஆயிரம் ரிக்ஷா தொழிலாளிகளுக்கு மழை கோட்டு வாங்க ரூபாய் 1 இலட்சமும் வழங்கினார். மேலும் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பூகம்ப சேதங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமான
நிதியுதவி வழங்கினார்.

1970ம் ஆண்டில் பரங்கிமலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக 200 மூட்டை அரிசியை பொன்மனச்செம்மல், மக்கள் திலகம்
அவர்கள் வழங்கினார்.

மக்கள் திலகம் அளித்த நிவாரணம் மற்றும் நிதியுதவியில் நூற்றில் ஒருபங்கைத்தான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் 99 விழுக்காடு அவர் அளித்த உதவியைச்
சொல்ல வேண்டும் என்றால், அதற்கு நேரம் போதாது.

மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள் தான் மக்களுக்குச் செய்த உதவிகளை உடனுக்குடன் மறந்து விடுவார். பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் பதிவு செய்த விபரங்கள்தான் இவை. விளம்பரத்திற்காக மாண்புமிகு புரட்சித்தலைவர் அவர்கள் எந்த உதவியையும் யாருக்கும் செய்ததில்லை.

நடிகரும், பத்திரிகையாளருமான திரு. சோ ராமசாமி அவர்கள், மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி ஒரு பேட்டியில் கூறும் போது, “”””எம்.ஜி.ஆர். விளம்பரத்துக்காக பிறருக்கு உதவி செய்கிறார் என்பது தவறு.

விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவுவதைப் பார்த்திருக்கிறேன். திரைப்படத்துறையில் அவருக்கு எதிராக இயங்கியவர்களுக்குக்கூட அவர் உதவியிருக்கிறார்””, என்று கூறியிருக்கிறார்.

தன் அருகில் இருந்த சக நடிகர்களுக்கு உதவிய அவருடைய கரங்கள்தான் பின்னாளில் தமிழ்நாட்டுக்கே உதவும்படியாக நீண்டன. கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச்
சொந்தக்காரர் என்று அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தன.

‘பாரத்’ விருது மற்றும் ‘பாரத ரத்னா’ விருது பெற்ற ஒரே தமிழ் நடிகர் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான்.

திரைவாழ்விலும் அரசியல் வாழ்விலும் மாண்புமிகு புரட்சித்தலைவரைப் போல இருக்க வேண்டும்; என்று கனவு காண்பவர்கள், பொதுவாழ்வில்
புரட்சித்தலைவரைப் போல பொதுமக்களுக்காக உதவிகள் செய்ய வேண்டும்.

நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் வரும்போதும், வறட்சியால் பாதிக்கப்படும் போதும் ஓடி வந்து உதவ வேண்டும். மக்களால் சம்பாதித்த பணத்திலிருந்து
மக்களுக்காக ஒரு பகுதியை செலவு செய்ய வேண்டும்.

மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் போல ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்காக பல தியாகங்களைச் செய்ய வேண்டும். மற்றவர்களை விமர்சனம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் ஒருகாலமும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஒரே எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட
கதையாகத்தான் முடியும்.

மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும், அரசியலிலும் எவரும் வீழ்த்த முடியாத அதிசய மனிதர். ஒரு நாட்டை ஒரு கலைவேந்தன் ஆள வேண்டும் என்று 200 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவஞானி பிளாட்டோ கனவு கண்டார். அந்தக் கனவை மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் முதன்முதலில் நனவாக்கி காட்டினார்.

வானத்தில் ஒரே பகலவனை, ஒரே சந்திரனைத்தான் பார்க்க முடியும். அதே போல எம்.ஜி.ஆர் என்பவர் இந்த உலகத்தில் ஒருவர்தான் இருக்க முடியும்.

நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்பவர்கள், மக்கள் களத்திற்கு வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் எம்.ஜி.ஆர். ஆக உயர்கிறார்களா? இல்லையா? என்று மக்கள் தீர்மானிப்பார்கள்.

மக்கள் மனக்கோட்டையை பிடிக்க இயலாதவர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை ஒருகாலமும் பிடிக்க முடியாது.
“”””புரட்சித்தலைவரின் தீர்க்கதரிசனமும் திறமைமிக்க நிர்வாகமும், தலைமையும் தமிழகத்தில் ஒரு பொற்காலத்தைத் தோற்றுவித்துள்ளது””
என்று அரிசோனா பல்கலைக்கழக அறக்கட்டளைக் குழுவினர் ஒரு பேட்டியில் கூறியுள்ளனர்.

மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர் புரட்சித்தலைவர் அவர்கள் ஏழைகளின் இறைவன், எல்லோருக்கும் தோழர், நல்லோர்க்குச் சோலை, தீயோரை திருத்தும் திருக்குறள்.
புரட்சித்தலைவர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி ஆட்சிக் கட்டிலில் அமர உழைத்த உழைப்பையும், பட்ட வமானங்களையும்
செய்த தியாகங்களையும் ஒவ்வொரு இயக்க தொண்டனும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

கழகத் தொண்டர்களின் விசுவாசமும், தியாகமும்தான் இந்த இயக்கத்தைக் காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். தியாகமும் விசுவாசமும் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கதையின் மூலம் கூறினால் நன்றாக புரியும்.

ஒரு பசுமையான காட்டில் திடீரென்று தீப்பற்றியது.அதுவரை அங்கு வாழ்ந்து கொண்டிருந்த விலங்குகள், பறவைகள் அனைத்தும் வேகம் வேகமாக அந்தக் காட்டிலிருந்து
வேறு காட்டிற்கு குடிபெயரத் தொடங்கின.

வானவீதியில் போய்க்கொண்டிருந்த இறைவன் இந்தக் காட்சியை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அங்கு இறைவன் கண்ட காட்சி அவரை வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு சிட்டுக்குருவி காட்டில் இருந்த ஒரு சிறு ஓடையிலிருந்து, காலையில் இருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, தனது சிறு அலகால் நீரை மீண்டும் மீண்டும் எடுத்து வந்து காட்டுத்தீயின் மீது தொடர்ந்து தெளித்துக் கொண்டிருந்தது.

அந்தச் சிட்டுக்குருவியின் அருகில் சென்ற இறைவன்.. “”””சிட்டுக்குருவியே! உன் செயல் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. நீயோ, சிறு குருவி.
உன் சிறு அலகால் துளி அளவு மட்டுமே நீரை எடுக்க முடியும். அப்படி எடுத்து வந்து இந்தப் பெரிய காட்டுத் தீயில் தெளித்தால், தீ அணைந்து விடுமா?
என்று கேட்டார். இறைவன் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் செயலில் சுறுசுறுப்பாக இருந்தது. ‘என் கேள்விக்குப் பதில் சொல் குருவியே! ’
என இறைவன் திரும்பவும் கேட்டார்.

நான் இந்தக் காட்டில்தான் பிறந்தேன். இந்தக்காட்டில்தான் வளர்ந்தேன். இந்தக்காட்டில்தான் பறந்து திரிந்து விளையாடினேன். இருக்க இடமும் உண்ண உணவும் கொடுத்த இந்தக் காடு, ஏதோ விதி வசத்தால் இப்படி ஒரு காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான் வேறு காட்டுக்கு செல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா?
என் கடமை என்னால் முடிந்த வரை இந்த நீரை தெளிப்பதுதான் என்றது.

அந்தச் சிறு குருவியின் நன்றியுணர்வையும் கடமையுணர்வையும், கண்ட இறைவன்.. அந்தச் சிட்டுக்குருவியிடம், “”””குருவியே.. நான் இறைவன்.. உன் நன்றி உணர்வை மெச்சினேன்.

என்னிடம் ஏதாவது வரம் கேள்”” என்றார். “”””இந்த காட்டுத்தீ அணைந்து, பழையபடி பசுமையாக மாற வேண்டும்”” என்றது.
“”””வரம் கொடுத்தேன்”” என்று இறைவன் மறைந்தார்.

காட்டுத்தீ அணைந்து காடு பசுமையாக மாறியது. குடிபெயர்ந்த பறவைகளும் விலங்குகளும் திரும்பவும் காட்டுக்குத் திரும்பின. அந்தச் சிட்டுக்குருவியைப்போல..
ஒவ்வொரு கழகத் தொண்டனும் விசுவாசமும் தியாகமும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விசுவாசத்திற்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்கிற நம் கழகக் கண்மணிகளுக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த சீர்மிகு விழாவிற்காக உழைத்த கழகப் பிரதிநிதிகளுக்கும் கழகத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், பலவகையிலும்
ஒத்துழைப்பு நல்கிய அரசு அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றும் நமதே! இன்றும் நமதே! நாளையும் நமதே! வாழ்க அண்ணா நாமம்! வளர்க புரட்சித் தலைவர் புகழ்! தொடர்க மாண்புமிகு அம்மாவின் ஆட்சி! நன்றி!
வணக்கம்!

பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று குன்னம் வட்டம், கீழக்குடிக்காடு கிராமத்தில், வெள்ளாற்றின் குறுக்கே மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 8.11 கோடி ரூபாய் மதிபீட்டில், தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இத்தடுப்பணை மூலம் அத்தியூர், கிழுமத்தூர், கைப்பெரம்பலூர் மற்றும் வயலூர் ஆகிய நான்கு கிராமங்களில் உள்ள 1204.80 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன் இத்தடுப்பணையை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பெரம்பலூர் மாவட்ட மக்கள் விடுமுறை நாட்களில் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்று வர அருகில் உள்ள முக்கொம்பிற்கோ,
அல்லது கல்லணைக்கோ, அல்லது அருகில் உள்ள மாவட்டங்களுக்கோ செல்லவேண்டிய நிலை உள்ளது என்றும் எனவே மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கல்லாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் செலவல் கட்டப்பட்ட விஸ்வகுடி அணைக்கட்டு பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென்று இம்மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் கோரிக்கையினை ஏற்று விஸ்வகுடி அணைக்கட்டு பகுதியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பெரம்பலூர்-கடலூர் மாவட்டத்தினை இணைக்கும்,
திருவாளந்துறை-கீழகல்பூண்டி இடையே, கல்லாற்றின் குறுக்கே 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியினை
தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கறிளன் கோரிக்கையினை ஏற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவை அடங்கிய விளையாட்டு வளாகத்திற்கு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.டி.இராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன்
ஆகியோர்கள் கொடுத்துள்ள கோரிக்கைகளை மாண்புமிகு அம்மாவின் அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!