The court ordered not to pay compensation to his son in the case of mother in the accident
பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தாய் உயிரிழந்த வழக்கில் தனயனுக்கு இழப்பீடு வழங்கிடாத அரசுப்பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, இவர் கடந்த 2004ஆம் ஆண்டு தனது மனைவி ராணி மற்றும் மூத்த மகன் முரளிராஜுவுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அரசுப்பேருந்து மோதி மூவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பெரியசாமியின் இளைய மகன் நவீன்குமார் மற்றும் அவரின் பாதுகாவலரும் பாட்டியுமான முத்துலட்சுமி மூலம் பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் இறந்த மூவருக்கும் தனித்தனியாக வழக்கு 2006 ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணை முடிவில் விபத்தில் உயிரிழந்த ராணியின் உயிரிழப்பிற்கு 4 லட்சத்து 65 ஆயிரத்து 22 ரூபாய் 50 பைசா இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, ஆனால் நீதிமன்றம் உத்தரவுப் படி இழப்பீடு தொகை வழங்கததால் நிறைவேற்று மனுவை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனுவின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி பாலராஜமாணிக்கம் வட்டியுடன் சேர்த்து ரூ. 11 லட்சத்து 50 ஆயிரத்து 205 ரூபாய் வழங்கவும், அதற்காக அரசுப்பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த திருச்சி கோட்டத்திற்கு சொந்தமான முசிறி கிளை பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்தை நீதிமன்ற அமீனா ஜோதிவேல் ஜப்தி செய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர்.
ஜப்தி செய்யப்பட்ட பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் உரிய ஊர்களுக்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.