The state bus collided with the pilgrims on the pilgrims: the court attached the bus, so did not pay compensation

திருச்சி அருகே கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிடாத அரசுப்பேருந்து நீதி மன்றம் உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(26), விவசாயி, இவர் கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ந்தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கோவிலுக்கு பாதையாத்திரையாக நடந்து சென்ற போது சிறுகனூர் என்ற இடத்தில் அரசுப்பேருந்து மோதி உயிரிழந்தார்.

இதுகுறித்து ராஜாவின் மனைவி பூபதி பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிவில் விபத்தில்
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 15 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து விழுப்புரம் கோட்ட அரசுப்போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்னர் லோக் அதாலத் முறையில்
தீர்வு காணப்பட்டு, 10 லட்சத்து 75 ஆயிரம் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் அரசுப்போக்குவரத்து கழகம் உறுதியளித்தபடி இழப்பீடு வழங்கவில்லை. இதனால் ராஜாவின் மனைவி பூபதி பெரம்பலூர் மாவட்ட முதன்மை
அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் அடிப்படையில் நீதிபதி பாலராஜமாணிக்கம் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து
14 லட்சத்து 54 ஆயிரத்து 427ரூபாய் வழங்கிடாத அரசுப்பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த காஞ்சிபுரம் டெப்போவிற்கு சொந்தமான அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் இன்று ஜப்தி செய்தனர்.

விபத்தில் இழப்பீடு வழங்காததால் பெரம்பலூரில் மட்டும் கடந்த 25 நாட்களில் அடுத்தடுத்து மூன்று பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அரசுப்பேருந்துகள் மோதி ஏற்படும்விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீட்டு தொகை உரிய நேரத்தில் சென்றடையாததற்கு, தனியார் வாகனங்கள் இன்சூரன்ஸ் செய்யப்படுவது போன்று அரசு பேருந்துகள் இன்சூரன்ஸ் செய்யப்படாததே காரணம் என்றும், இதனை தவிர்த்திட அரசு பேருந்துஉள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!