Thirukkural prize scheme: Perambalur Collector V. Shantha invites students to participate
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வி அறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் 70 மாணவ – மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசாகத் தமிழ்வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
2020-21 ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறல் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப்பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ – மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகள் தங்களது பள்ளி தலைமையாசிரியரிடம் பள்ளியில் பயில்வதற்கான தகுதிச்சான்று ஒப்பம் பெற்றுவர வேண்டும். இந்த தேர்வானது தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் மற்றும் 3 ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெறும். இந்த தேற்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-225988 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.