தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 147வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தேசபிதா காந்தியடிகள் அவர்களின் தியாகம், அவர் கடைபிடித்த ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அவர் கடந்து வந்த பாதை ஆகியவைகளை நினைவுகூறும் இவ்வேளையில், அதனை பின்பற்றி நாமும் நமது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் எனும் உயர;ந்த நோக்கில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் மாணவ, மாணவிகளாகிய நீங்கள் தாங்களது பள்ளிகளில் தாங்கள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தமாக பராமிரிக்க வேண்டும். தாங்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் திறந்தவெளி பகுதிகளை கழிவறைகளாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொண்டு தங்கள் இல்லங்களில் தனி நபர் கழிவறைகளை உருவாக்கி சுகாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். இந்த செயல்பாட்டிற்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் சுகாதாரக் காவலர்களாக செயல்பட்டு தங்கள் பள்ளிகள் மற்றும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் கழிவறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும்.
இப்போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றிப்பெற்றவர்கள், ஏதேனும் ஒரு நாளில் மாவட்ட ஆட்சியரின் ஒவ்வொரு நிகழ்விலும் உடனிருந்து பங்கேற்று, உரையாடுவதற்கும், இரண்டாம் இடம் பெற்றவர்கள் ஒரு நாள் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு நிகழ்விலும் உடனிருந்து பங்கேற்கவும், உரையாடுவதற்கும், மூன்றாமிடம் பெற்றவர்கள் சார் ஆட்சியருடன் நாள் முழுவதும் இருந்து சார் ஆட்சியர் ஒவ்வொரு நிகழ்விலும் உடனிருந்து பங்கேற்று உரையாடுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். என பேசினார்.
இப்போட்டிகளில் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து தலா இரண்டு மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு நடத்தப்பட்ட இப்போட்டியானது நான்கு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் சுற்றில் நேரடி வினாவிடை எதிர்பார்ப்பு அடிப்படையிலும், இரண்டாம் சுற்றில் பல தெரிவு வினா விடை அடிப்படையிலும் மற்றும் மூன்றாவது சுற்றில் நிழற்படக்காட்சி விவர வினாவிடை அடிப்படையிலும் அமைக்கப்பட்ட வினாக்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த வினாடி வினா போட்டி நிகழ்ச்சியில் 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான 139 பள்ளிகளிலிருந்து 260 மாணவர்களும் 4 கல்லூரிகளிலிருந்து 10 மாணவர்களும் பங்குபெற்று பயன்பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மதிப்பெண் தர அடிப்படையில் முதல் மூன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், மாவட்ட கல்வி அலுவவர் வெங்கடாஜலபதி உள்பட பலர் கலந்து பெற்றனர்.