Trichy Zone Level Basketball Tournament Begins in Perambalur!
திருச்சி மண்டல அளவிலான 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி குழுமம் இணைந்து நடத்தும் திருச்சி மண்டல அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவ,மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி 14ம்தேதி முதல் 17ம்தேதி வரை என 4 நாட்கள் நடக்கிறது.
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்த துவக்க விழாவிற்கு பள்ளி குழும தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கூடைப்பந்து கழக செயலாளர் அஜிஸ், ரோவர் கல்வி நிறுவன துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன், வள்ளாலர் குழும நிர்வாக இயக்குநர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவர் ஆதவ் அர்ஜூன் போட்டியை தொடங்கிவைத்து பேசினார்.
இந்த போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகியே 10 மாவட்டங்களை சேர்ந்த 10 மாணவர்கள் அணியும், 10 மாணவிகள் அணியும் கலந்து கொள்கின்றன. முன்னதாக கோல்டன் கேட்ஸ் பள்ளி குழும செயலாளர் அங்கையற்கண்ணி வரவேற்றார். துணை தலைவர் ஹரிஷ் நன்றி கூறினார்.
Share on:
WhatsApp