ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதற்காக குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டை ஒன்று 190க்கு விற்பனை செய்ய இத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

ஆனால், அந்த திட்டம் பொதுமக்களுக்கு சென்று சேரும் போது அதற்கு கூடுதல் கட்டணம் கட்டாய லஞ்சமாக வசூலிக்கப்படுகிறது.

இப்படி வசூலிக்கும் பணம் யார் யாருக்கு செல்கிறது என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது அரசு அலுவலர்கள் மட்டத்திலேயே வசூலிக்கப்பட்டு பிரித்துக் கொள்ளப்படுகிறதா இல்லை, அரசியல் வாதிகளும் இதில் பங்கு பெறுகின்றனரா என்பதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு வழங்கும் திட்டங்களில் பயனாளிகளிடம் குறிப்பிட்ட தொகை வசூலிப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

லஞ்சம் கண்ணுக்கு தெரியாமல் பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது. அது தற்போது வாட்ஸ் மூலம் வெளியாகி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கு உள்ளது.

தமிழக அரசு மானிய விலையில் வழங்கி வரும் அம்மா சிமெண்ட் இந்த கிடங்கில் மொத்தமாக இறக்கி வைக்கப்பட்டு பின்னர், இங்கு இருந்து வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் அம்மா சிமெண்ட் கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது 100 மூட்டை அம்மா சிமெண்ட் தேவைப்படும் பயனாளிகள் ரூ.19000 – க்கான வங்கி வரைவோலை மற்றும் வீடு கட்டி வருவதற்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் கிருஷ்ணாபுரத்தில் உள்ள மேற்கண்ட கிடங்கில் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்த பயனாளிகள் பதிவு வரிசைபடி காத்திருந்து சிமெண்ட் ஏற்ற செல்லும் போது கிடங்கிலிருந்து ஆட்டோவில் ஏற்றி விடுவதற்கு ஏற்று கூலி ரூ.600 – ம் அதையில்லாமல் கிடங்கு மேலாளருக்கு ரூ. 600 – ம் கட்டாய வசூல் செய்கிறார்கள்.

இதுதொடர்பாக பயனாளி ஒருவரிடம் கிருஷ்ணாபுரம் கிடங்கு மேலாளர் இளங்கோவன் பேசிய செல்போன் உரையாடல் தற்போது வாட்ஸ் அப்-களில் வெளியாகியுள்ளது. அதில் கிடங்கு மேலாளர் இளங்கோவன் அம்மா சிமெண்ட் வழங்கும் அனைத்து கிடங்குகளிலும் ஏற்றுக்கூலி 100 மூட்டைக்கு ரூ.600 ம் அதையில்லாமல் கிடங்கி நிர்வாகத்திற்கு ரூ.600 ம் வாங்குகிறார்கள். அதேபோல்தான் நாங்களும் வாங்குகிறோம் அது எல்லாம் மாமூல்தான் அதை மாற்ற முடியாது என கூறியுள்ளார்.

அம்மா சிமெண்ட் வாங்கும் பயனாளிகளிடம் மூட்டைக்கு ரூ. 6 லஞ்சமாக கட்டாயப்படுத்தி வசூல் செய்து பொதுமக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!