பெரம்பலூர் மாவட்டத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் மக்கள் சிந்தனைப்பேரவை இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா – 2016 ன் துவக்க விழா இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நடந்த விழாவில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் க.பாஸ்கரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமை பேசியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்த புத்தத்திருவிழாவிற்கு இந்த ஆண்டும் தங்களது ஆதரவினை தந்த பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒருவிதமான அதிர்வலைகளை ஏற்ப்படுத்தும். அதுபோலத்தான் எனது வாழ்விலும் பல புத்தகங்கள் பல விதமான அதிர்வளைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. அந்த அதிர்வலைகள்தான் மனித வாழ்க்கையை மேம்படுத்தும். எனவே இங்கு கூடியிருக்கின்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தனி நுலகங்களை அமைக்க முன் வர வேண்டும், என பேசினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் க.பாஸ்கரன் பேசுகையில் தெரிவித்ததாவது:
புத்தகம் வாசிக்கும் போது அறிவு மேம்படுகிறது. மக்களின் அறிவு மேம்படும்போது ஒரு சமுதாயமே மேம்படுகிறது. பல்வேறு சூழல்களை சந்திக்கும் மனதை ஒருமுகப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் பெரிதும் உதவுவது புத்தகங்கள். நூலை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஆயிரம் முறை வாழ்வதற்கு சமமானவர்கள். நம்மை நாமே உணர்ந்து கொள்ளவும், தவறுகளை சரி செய்து கொள்ளவும் வாய்ப்பளிப்பது புத்தகங்களே. எனவே நீங்கள் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற உறுதி மொழியினை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, சார் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தலைவர் காந்திகண்ணதாசன், பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் மருத்துவர் கோ.சிவசிதம்பரம், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஆ.சிவராமன் உட்பட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள் இன்றைய நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.