ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சென்னை தொடங்கி குமரி வரை மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக பெரம்பலூர் திரையரங்களில் இன்று பகல் நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் கடைவீதி, பழைய,புதிய பேருந்து நிலையம், நான்குரோடு மற்றும், வேப்பந்தட்டை, அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு, வி.களத்தூர், வாலிகண்டபுரம், வேப்பூர், குன்னம், அகரம்சீகூர், பாடாலூர், செட்டிக்குளம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டிற்கு தடையை விலக்க கோரியும், பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும், 3வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு இளைஞர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி அனைத்து தனியார் பள்ளிகள் , கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டது. முக்கிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியர் பேருந்துகளும் இயக்கபடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஜல்லிகட்டிற்கு ஆதரவாக விடுமுறைகள் அளித்தன. தொழிலாளர்களும் வேலைகளுக்கு செல்லாமல் போராட்டகளங்களுக்கு சென்று கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.