accident_15பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் தேவராஜ் மகன் சரவணன் (30), பெருமாள் மகன் முருகன் (35), கொத்தனார்களான இவர்கள் இருவரும் அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா பாலையூரில் கட்டிட வேலையை முடித்து விட்டு நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் செந்துறையிலிருந்து, புதுவேட்டக்குடி, வேப்பூர் வழியாக ஆய்க்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் வேப்பூர் அருகே உள்ள தனியார் கோழிப்பண்ணை அருகே வந்த போது திடீரென இரு சக்கர வாகனத்தின் முன்பக்க சக்கரம் டயர் வெடித்ததால் சரவணனின் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சரவணன் மற்றும் முருகனை அவ்வழியே வந்தவர்கள் பார்த்து விட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், சரவணன் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த சரவணனுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர்தான் கவிதா என்ற பெண்னுடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!