பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேற்று இரவு கார் மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ரெங்கநாதன் (45). இவர், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது, புதுச்சேரியிலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற கார் மோதியதில் பலத்த காயமடைந்த ரெங்கநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, ரெங்கநாதனின் அண்ணன் தமிழ்செல்வன் (49) அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் காவல் நிலையத்தினர், கார் ஓட்டுநர் புதுச்சேரி கோரிமேடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சண்முக சுந்தரத்தை (49) கைது செய்து விசாரிக்கின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!