வாக்குச்சாவடியில் பணி புரியவுள்ள அலுவலர்களுக்கு கணிணி குலுக்கல் (ரேண்டம்) முறையில் வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு பொது பார்வையாளர் வி.என்.விஷ்ணு தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும்
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி வாக்குசாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 3,077 அலுவலர்களுக்கு தேர்தல் நாளில் வாக்குச்சாவடி நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு 23.4.2016 அன்று குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், 24.4.2016 அன்று பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் நடைபெற்றது.
மேலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் அவர்கள் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடிகள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி இன்று பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதிகளில் பணியாற்றவுள்ள தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி மையங்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் முன்னிலையில் பொது பார்வையாளர் வி.என்.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
மேலும் இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு வருகின்ற 07.05.16 அன்று வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கீதா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் மகாராஜன், செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.