Special camp tomorrow to address agriculture, housing Patta issues: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வருவாய்த்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் “விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்“ என்ற அறிவிப்பிற்கிணங்க சிறப்பு முகாம்கள் நடத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சிறப்பு முகாமில் நில அளவை (புல) எண்கள், உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார், காப்பாளர் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், உறவு நிலை குறித்த திருத்தம், மேற்குறிப்பிட்ட சில கலங்கள் பதிவுகளின்றி (வெற்றாக) இருக்கும் இனங்கள், ஒரு பட்டாதாரரின் பரப்பு, பெயர் பக்கத்து நிலத்தின் பட்டாதாரரின் விவரங்களுடன் (ஒன்றின் இடத்தில் மற்றொன்று மாறியிருக்கும் இனங்கள்) குறித்த மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நாளை 23.03.2022 அன்று பெரம்பலூர் வட்டத்தில் துறைமங்கலம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு துறைமங்கலம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்,
வேப்பந்தட்டை வட்டத்தில், தொண்டமாந்துறை(கி), தொண்டமாந்துறை(மே), தழுதாழை வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தொண்டமாந்துறை(கிழக்கு) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்,
குன்னம் வட்டத்தில் வடக்கலூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வடக்கலூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்,
ஆலத்தூர் வட்டத்தில் நக்கசேலம், புது அம்மாபாளையம் வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு நக்கசேலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் இம்முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.