பெரம்பலூர், 12: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் 3-வது வார்டை சேர்ந்தவர் கந்தசாமி மகன் அபிமன்யூ (50). இவர், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது, சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் அபிமன்யூ மீது மோதியதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து சென்னை ராமபுரத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ரத்தினத்தை (50) கைது செய்து விசாரிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு:

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள தம்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி கலாவதி (40). இவர், இன்று காலை அவரது உறவினரான நாராயணசாமி மகன் மணிகண்டனுடன் (32), தம்பையிலிருந்து வல்லாபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவுசாலை அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கிழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கலாவதி அங்கு உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது உறவினர் சின்னசாமி அளித்த புகாரின்பேரில் மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!