100 percent subsidy for poultry raising: Government Announcement
ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வர்த்தகரீதியான கோழிப்பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு செய்துள்ளது.
தமிழகத்தில், நகர் மற்றும் பேரூர் பகுதிகளில் வர்த்தகரீதியான கோழிப் பண்ணைகள் கடந்த பல ஆண்டுகளில் பெருகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊரகப் பகுதிகளில் ஏழை மக்கள் குறிப்பாக பெண்கள் பல காலமாக தங்களது புழக்கடைகளில் வளர்த்து அனுபவம் பெற்றுள்ள கோழி வளர்ப்புத் தொழிலை மேன்மை அடையச் செய்து அதன் மூலம் கிராம பொருளாதாரம் மேம்பட ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தினை 50 சதவீதம் மத்திய மற்றும் 50 சதவீதம் மாநில அரசு பங்களிப்புடன் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ள 100 பெண் பயனாளிகளில் 80 பயனாளிகள் பொது பிரிவினராகவும், 20 பயனாளிகள் தாழ்த்தப்பட்டவராகவும் தேர்ந்தெடுத்து திட்டத்தினை செயல்படுத்தப்பட உள்ளது.
ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கால்நடை உதவி மருத்துவர் மூலம் பயிற்சி அளித்து 4 வார வயதுடைய 20 நாட்டு ரக கோழிகள் ஒன்று ரூ.50 வீதம் ரூ.1000- க்கு 100 சதவீதம் விலையில்லாமல் வழங்கவும், கோழிகளுக்கான இரவு தங்கும் கொட்டில் அமைக்க பயனாளிகளுக்கு ரூ.1500- வழங்கவும் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மருத்துவ உதவி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கவும் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஏழ்மையான வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பிற வகுப்பைச் சேர்ந்த பெண் பயனாளிகள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். பெண்களில் விதவைகள் கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், முதிர்கன்னிகள், புதுவாழ்வு திட்ட உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரத் திட்டம் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் விண்ணப்பத்துடன் (பாஸ்போர்ட் அளவு) வண்ணப் புகைப்படம் இரண்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.