75th Independence Day: In Perambalur, Collector Venkatapriya paid homage by hoisting the national flag.
இந்தியத்திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் வெங்கட பிரியா இன்று காலை, தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். போலீஸ் எஸ்.பி. ச.மணி முன்னிலை வகித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையில் நடந்த காவல் துறையின் அணிவகுப்பின் முதலாம் படைப்பிரிவிற்கு சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாதன், இரண்டாம் படைப்பிரிவிற்கு சப்-இன்ஸ்பெக்டர் மதுமதி, மூன்றாம் படைப்பிரிவிற்கு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையேற்று வழி நடத்திச் சென்றனர். மேலும், ஊர்க்காவல் படை பிரிவுக்கு ஆனந்தன் தலைமை வகித்தார்.
அதனைத் தொடர்ந்து சமாதானத்தைக் குறிக்கும் வகையில் வெண்புறாக்களை, கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி ஆகியோர் பறக்கவிட்டனர். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 28 காவலர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று (கோவிட் 19) நோய்த்தடுப்பு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், அரசுத் துறையில் திறம்பட அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதற்காகவும் என மொத்தம் 195 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி சிறப்பித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவப்படுத்தும் விதமாக வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து பொன்னாடை அணிவித்து கௌரவித்து இனிப்புகளை வழங்கினர்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எ.லலிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.