A court order: official inspection of the safety of all communities participating in temple

policeபெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்க உரிய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று மத்திய மண்ட ஐ.ஜி வரதராஜ், வி.களத்தூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தில் மகாமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று துவங்கி வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என சுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் நடைபெற்று வரும் மகாமாரியம்மன் கோயில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்களை பங்கேற்ற அனுமதிக்க வேண்டும். அவ்வாறு பங்கேற்கும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மாவட்டநிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து இன்று திருச்சி மத்திய மண்ட ஐ.ஜி.,வரதராஜ் வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து பின்னர் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வி.களத்தூரில் நடைபெறும் ராயப்பா, செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார்கிரி மங்களமேடு சரக துணை சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் வருவாய்த்துறையினர் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!