Awards for the best artists for the year 2018-2019 through the Kalai manram: Perambalur Collector Information!


பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் கலைப் பண்புகளை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில் கலைஞா்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு 2002-2003ஆம் ஆண்டு முதல் வயது மற்றும் கலைப் புலமைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

2018-2019ஆம் ஆண்டுகளுக்கு கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் இயல், இசை மற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டக் கலைகளில் சிறந்து விளங்கும் ஐந்து கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேர்வாளர் குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

ஆகவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறித்து ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலை இளமணி” விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலை வளர்மணி” விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலைச் சுடர்மணி” விருதும், 51 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலை நன்மணி” விருதும், 61 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ”கலை முதுமணி” விருதும் வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று மற்றும் கலை தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

இம்மாவட்ட விருது பெறத் தகுதி வாய்ந்த கலைஞர்களிடமிருந்து 28.08.2021ஆம் நாளுக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டொப்பொ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி – 06 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!