Brother who stole sheep near Perambalur – brother arrested
பெரம்பலூர் அருகே ஆடு திருடிய அண்ணன் – தம்பியை போலீசார் கைது செய்தனர்
பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி ராணி (வயது45). இவர் தனது குல தெய்வ கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக ஆட்டுகிடா ஒன்று வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடு நேற்று காலை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார் . அது குறித்து வ.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் மங்களமேடு மின்சார வாரிய அலுவலகம் அருகே வெள்ளாட்டை வைத்துக் கொண்டு நின்றிருந்த 2 பேரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவலை கொடுத்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் தேவையூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்கள் பிரபாகரன் (வயது 40), சிவக்குமார் (36) என்பதும், அண்ணன், தம்பிகளான இருவரும் சேர்ந்து மேட்டுப்பாளையத்தில் ராணியின் வீட்டில் ஆடு திருடிக் கொண்டு வந்திருப்பபதும் தெரியவந்தது. வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடிய அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்து மேலும் எங்கெங்கு ஆடு திருடினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.