child-labour-human-chainபெரம்பலூர் : பெரம்பலூரில், இன்று குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பாலக்கரை பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு , தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மனித சங்கிலி மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் நடைபெற இருந்தது.

இதற்கு பள்ளி மாணவர்கள் காலை 9.15 மணிக்கு வரவழைக்கப்பட்டு பாலக்கரையில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழி நெடுக கை கோர்த்து மனித சங்கியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வரவில்லை.

மனித சங்கிலியில் நின்ற மாணவர்கள் 10 வயது, 12 வயது, 15 வயதிற்கு உட்பட்ட மாணவ -மாணவிகளே அதிக நேரம் நின்று கொண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல சுள்ளென வீசிய 90 டிகிரி பாரான்ஹீட் வெயிலை தாங்க முடியாத மாணவர்கள் ஆங்காங்கே கால் வலியாலும், உடல் வழியாலும், வியர்வை வழிந்து நட்டை நனைந்தும், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், சாலையில் வாகனங்களால் ஏற்படும், புகை மற்றும், புழுதியால் அவதிபட்டனர்.

மாணவர்கள் வாடி அசதிக்கு உள்ளானதால் ஆங்காங்கே நிழலுக்கு ஒதுங்கவும், அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் அடைந்தனர். கடைக்காரர்கள் மாணவர்களின் தாகத்திற்கு தண்ணீர் வழங்கினார்கள். செய்தியாளர்கள் இதனை செய்தியாளர்கள் படம் பிடித்ததால் மனித சங்கில் பேரணி ரத்து செய்யப்பட்டது.

இது போன்று பள்ளி குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி நடத்தும் அதிகாரிகள் வெயிலில் வாடும் கொடுமையை தடுக்க வேண்டும்.

குழந்தை தொழிலாளர் பணியில் அமர்த்தக்கூடாது என்ற நிகழ்ச்சி அதே குழந்தைகளுக்கு எதிராக அமைந்ததுதான் வேதனை.

கல்வி கற்க முதலில் மாணவர்களுக்கு மனதளவில் சஞ்சலம் ஏற்படக்கூடாது. அமைதியான சூழலே அதிகளவில் கற்க வாய்ப்பாக அமையும், எனவே பிஞ்சு நெஞ்சுகளில் வேதனை ஏற்படும் வகையில் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பதை முதலில் தடுக்க வேண்டும்.

எத்தனையோ முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட்டு விட்டு ஒன்றும் அறியாத சிறார்களை விழிப்புணர்வு என்ற பெயரில் பள்ளியில் இருந்து கி.மீ கணக்கில் நடந்தே அழைத்து வந்து கொடுமைபடுத்துவதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!