CM’s welfare schemes for orphans by Perambalur: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
குழந்தைகள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது இளைஞர் நீதிச் சட்டம் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015ன் பிரிவு 74ன் கீழ் குழந்தைகளின் அடையாளத்தினை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பிரிவில் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தை அல்லது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தை அல்லது தற்போது நடைமுறையிலுள்ள ஏனைய சட்டங்களின் கீழ் தொடர்புடைய குற்றச் செயலால் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது குற்றத்தின் சாட்சிகள் அடையாளம் தெரிந்துகொள்ளும் வகையில் விசாரணை, புலனாய்வு விசாரணை அல்லது நீதிமன்ற நடைமுறைகள் செய்தித்தாள், காலமுறை இதழ், துண்டுப் பிரசுரம், ஒலி மற்றும் ஒளிபரப்பு ஊடகம் போன்றவைகளில் குறிப்பாக குழந்தையின் பெயர் முகவரி அல்லது பள்ளி, ஏனைய விவரங்கள் எதனையும் வெளியிடுதல் கூடாது. மேலும், அத்தகைய குழந்தையின் நிழற்படத்தையும் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் உயரிய நலனுக்கு ஏற்றதென கருதும் குழு அல்லது குழுமத்தில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த பின்னர் குழந்தைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தலாம். எனவே, இதர இனங்களில் வெளிப்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
கோவிட் காரணமாகவும் பல்வேறு காரணங்களினாலும் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சரால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள், அவர்களது பாதுகாவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164. எம்.எம். பிளாஸா, 2வது தளம், திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர் – 04328-275020 என்ற முகவரியில் நேரில் சென்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.