Continue the accident at PERAMBALUR: public roadblock for demanding Flyover
பெரம்பலூர் அருகே தொடர்ந்து விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கோரி பொதுமக்கள் சாலைமறியல்
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூரை சேர்ந்த விவசாயி சீனிவாசன் (வயது 42), இன்று காலை வயலுக்கு சென்ற அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த ஊர் வழியாக செல்லும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற டேங்கர் லாரி சீனிவாசன் மீது மோதியது. இதில் சீனிவாசனுக்கு கால் எலும்பு முறிந்தது. மோதிய லாரி நிற்காமல் தப்பி சென்றுவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தேவையூர் கிராம மக்கள் ஒன்று திரண்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் அதனால் அவ்வூரை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அதற்கு அப்பகுதியில் புதிய மேம்பாலம் கட்டித்தரக்கோரினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வருவாய் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர், பொதுமக்கள் கலையாததால் லேசாக தடியடி நடத்தி போலீசார் சாலைமறியலை கலைத்தனர். இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்ப்பட்டது.