Demonstration to demand ration shop, costless goats near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை வேண்டியும், விலையில்லா ஆடுகள் வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அகரம்சீகூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராசி நகர், கோகுலம் நகர், பஸ்நிலையில் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி மக்கள் தங்கள் ரேஷன் கார்டுக்கு உரிய பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு செல்ல 2கிமீ தூரம் செல்ல வேண்டி உள்ளது மேலும் இந்த ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, பாமாயில் என ஒவ்வொரு நாளும் ஒரு பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் அனைத்து பொருட்களும் வாங்க முடியாமலும், அதிகப்படியான அலைச்சல் ஏற்படுகிறது. எனவே அகரம்சீகூர் பஸ்நிலையம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் பக்கத்தில் உள்ள அரசு கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரியும், விலையில்லா ஆடுகள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
தகுதியான பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்ககோரியும் பல முறை அது சம்மந்தபட்ட ஊராட்சி நிர்வாக அலுவலர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டித்து நேற்று அகரம்சீகூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிபாண்டியன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுமார் இரண்டு மணி நேரம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அலுவலர்கள் யாரும் வராததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.