Higer Offical Torture near Perambalur: Temporary employee commits suicide by drinking poison!

பெரம்பலூர் அருகே தற்காலிக ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு, உயரதிகாரிகள் சிலரின் டார்ச்சரே காரணம் என அவரது குடும்பத்தினர் அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமம், பழைய தாலுகா ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்,45. இவர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் கட்டாமல் தடுப்பணை கட்டியதாக போலி ஆவணம் தயார் செய்து அரசு பணத்தை முறைகேடு செய்த அதிகாரிகள் குறித்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், “சம்பந்தப்பட்ட ஊழல் அதிகாரிகள் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் சில அலுவலர்களிடம் விசாரித்தனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர், இந்த ஊழலில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சக்திவேலுக்கு தான் தெரியும் என்றும் வாக்குமூலம் கொடுத்ததுடன், சக்திவேலிடம் இவ்வாறே தெரிவிக்கும் படியும் கட்டாயப்படுத்தி டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

முறைகேடு செய்து அரசு பணத்தை கையாடல் செய்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த அந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தமே இல்லாமல் தற்காலிக ஊழியரான தன்னை சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதை அறிந்து சக்திவேல் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த சக்திவேல் மதியம் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் சக்திவேலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று மாலை இறந்தார்.

சக்திவேலின் தற்கொலைக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் மற்றும் சில அதிகாரிகளின் தொடர் டார்ச்சரே காரணம்: எனவே அவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேலின் அண்ணன் வேல்முருகன் அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் சக்திவேலின் சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து , வழக்கு பதிந்து சக்திவேலின் தற்கொலைக்கு காரணம் என்ன? காரணமானவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

உயர் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்காலிக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் ஈடுபட்டு அரசு பணத்தை கையாடல் செய்யும் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்த பின்னரும் சம்மந்தப்பட்ட துறையில் பெரம்பலூர் மாவட்ட உயரதிகாரிகள் ஊழல் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் மெத்தனமாக இருப்பதாலேயே தற்காலிக ஊழியரின் தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!