In 190 places in Perambalur district tomorrow; Corona Vaccine Special Camp: Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 8ம் கட்டமாக நாளை (14.11.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. நமது மாவட்டத்தில், 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 157 இடங்களில் சிறப்பு முகாம்கள் என 190 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கென பெரம்பலூர் வட்டாரத்தில் 45 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 48 தடுப்பூசி மையங்களும், ஆலத்தூர் வட்டாரத்தில் 46 தடுப்பூசி மையங்களும், குன்னம் வட்டாரத்தில் 51 தடுப்பூசி மையங்களும் என மொத்தம் 190 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்கள் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, 18 வயதிற்கு மேற்பட்ட, கொரோனா தடுப்பூசி போடாத அனைவரும் மறக்காமல், மறுக்காமல் தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு, நமது பெரம்பலூர் மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!