பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு, கொலையாளிகளை கண்டுபிடிக்க கோரி, கொலையுண்டவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

perambalur-road-roko

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட திருநகரைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் குமார் (வயது 44), பெரம்பலூர் நகராட்சி 2வது அதிமுக செயலாளரும், இறைச்சி கடை உரிமையாளருமான இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டை சென்ற குமார் திடீரென மாயமானதால் அவரது குடும்பத்தார் குமாரை தேடி வந்தனர்.

நேற்று மாலை, பெரம்பலூர் அருகே உள்ள புற வழிச் சாலையில் கோனேரிப்பாளையத்திற்கும், வடக்கு மாதவி சாலைக்கும் இடையே சாலையோரம் செல்லும் மண் பாதையில் குமார் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தன் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி, குமாரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று அரசு மருத்துவமனை முன்புறம் துறையூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

அவர்களிடம், நாங்கள் அடையாளம் காட்டும் சந்தேகத்திற்கிடமான 5 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென குமாரின் உறவினர்கள் விடுத்த கோரிக்கை ஏற்று அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!