In Perambalur break the 10 pounds of gold jewelry at the locked door of the house, 35 thousand rupees cash theft: Unidentified persons tampering
பெரம்பலூர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகை, 35 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
பெரம்பலூர் அருகே உள்ள சிறுகுடல் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியகராஜன்(42). இவர் பெரம்பலூர் அருகே எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் பர்னிச்சர் தொழிற்சாலையும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு செல்லும்சாலையில் பர்னிச்சர் கடையும் நடத்தி வருகிறார். சிறுகுடல் கிராமத்திலுள்ள அவரது வீட்டின் தரை தளத்தை உறவினர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு விட்டு, முதல் தளத்தை பூட்டி வைத்து , மனைவி நீலாவதி(40), மகள்கள் நிவேதா(18), நிரோஷா(16), துர்கா(12) ஆகியோருடன் கடந்த மூன்று ஆண்டுகளாக பர்னிச்சர் கடைக்கு எதிரே உள்ள விவேகானந்தர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுகுடல் கிராமத்திலுள்ள தியாகராஜனுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ராஜா (28), அவரது மனைவி ஷியமலா(22)வுடன் ஆடி 18 சீருக்கு மாமனார் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில், கதவுகளில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தியாகராஜன் சிறுகுடல் கிராமத்திற்கு சென்று வீட்டில் பார்த்த போது, தரை தளம் மற்றும் முதல் தளத்தில் பூட்டப்பட்டிருந்தமூன்று கதவுகளின் கொண்டி, பூட்டு மற்றும் தாழ்பாள் உடைக்கப்பட்டு அறையினுள் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடய அறிவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் ஆய்வு செய்து தடையங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறனர்.
வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்து வந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து, உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.