பெரம்பலூரில் வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆன்லைன் வணிகத்தை தடைசெய்ய வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்தினர்.
இந்தியாவின் சுயசார்பு பொருளாதாரத்தையும்,வியாபாரிகளின் சுதந்திரத்தையும் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்து, இந்தியாவில் இருந்து முழுமையாக அகற்றி சில்லரை வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்கவேண்டும்.
அந்நிய வணிகத்தையும், பெருவணிகர்களையும் இந்தியாவிற்குள் நுழைவதற்கு வழிவகுக்கும் உலக வர்த்தக ஒப்பத்தை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பிரச்சாரம் காந்தி சிலை முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஏகேவி.சண்முகநாதன் தலைமை வகித்து பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்தார். மாநில இணைச் செயலாளர் ரவி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காமராஜர் (பழைய) பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கி. முகுந்தன், ஒஜீர், அகமதுபாஷா, துணிக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் அமுதா ஸ்டோர் அன்பழகன், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ராஜகோபால், ஓட்டல் மற்றும் தேனீர் விடுதிகள் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த முத்துகுமார், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனையாளர் சங்கத்தை சேர்ந்த சுரேஷ் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நகரில் உள்ள வியாபாரிகளுக்கு ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்தனர்.