In Perambalur truck plowed into the roadside ditch near the wall collapsed, driver injured
பெரம்பலூர் அருகே பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 15 அடி பள்ளத்தில் பாய்ந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்திக்குள்ளானதில், லாரி ஓட்டுனர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரம் கிராமத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையிலிருந்து டயர்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று உத்திரபிரதேச மாநிலம் ஜான்ஷட்பூர் நோக்கி இன்று அதிகாலை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு சாலைக்கும் தீரன் நகர் பகுதியிலுள்ள சாய் பாபா கோவிலுக்கும் இடையே வந்து கொண்டிருந்த போது காட்டாற்று ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் பக்க வாட்டு தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 15அடி பள்ளத்தில் பாய்ந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த லாரிஓட்டுனர் ஓம்பிரகாஷ்யாதவ் (36) படுகாயமடைந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுனர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து டயர் தொழிற்சாலை மேற்பார்வையாளரான சத்திரமனை கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(30) அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரி ஓட்டுனர் ஓம்பிரகாஷ்யாதவ் மது பானம் அருந்தியிருப்பது தெரிய வந்துள்ளது.