Jallikkattu in Annamangalam; 580 bulls participating, 48 players injured!

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 750 காளைகள் பங்கேற்க வந்தன. அதில் 580 ஜல்லிக்கட்டு காளைகள் விழாவில் கலந்து கொண்டது. 290 வீரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை பிடித்தனர், மதியம் 2 மணிக்கு பிறகு அனுமதி நேரம் முடிந்தது. பின்னர் 3 மணி வரை நீட்டித்த போதும், போதிய நேரம், வீரர்கள் இல்லாதததால் 170 காளைகள் போட்டியில் பங்கேற்காமல் திரும்பி சென்றன.

முன்னதாக காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை கால்நடை மருத்துவர்களால் செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதிக்கான மருத்துவ சான்றிதழ்களும், கொரோனா பரிசோதனை சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

வாடிவாசலில் இருந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு ரோஜா மாலைகளுடன் அவிழ்த்து விடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மாடுபிடி வீரர்களை உற்சாக படுத்தினார்கள்.

தொடர்ந்து பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 25 மாடுபிடி வீரர்கள் உள்பட 48 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர். இதில், வருவாய், காவல், கால்நடைத் துறை, சுகாதாரத்துறையினர், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறையினர் தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு விழாவை நடத்தினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!