kariyaperumal Puthur jallikattu in Namakkal district: Collector inspection on work

கரியபெருமாள்புதூரில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்ற தாலுக்கா, கரியபெருமாள்புதூரில் வரும் ஜன.30ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதையும், காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தை சுற்றிலும் இரண்டுடடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக மைதானத்தில் தேங்காய்நார் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சப் கலெக்டர் கிராந்தி குமார் பதி, டிஎஸ்பி ராஜேந்திரன், தாசில்தார் பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.