Perambalur: Two-day special camp for the census; Collector announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இதற்காக SE.CENSUS.GOV.IN என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அலைபேசி / கணினி வாயிலாக மேற்கண்ட முகவரியில் பதிவு செய்து தேர்வு செய்து தங்களது வீடுகள் பற்றிய 33 வினாக்களுக்கான விவரங்களையும் தானாக முன்வந்து விடுதலின்றி நிரப்பிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சுய கணக்கெடுப்பு கால கட்டத்தில் பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தும் விதமாக பொது மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கணினி வாயிலாக கணக்கெடுப்பு செய்ய சுய கணக்கெடுப்பு வசதி மையங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், பொதுமக்கள் சுய கணக்கெடுப்பு பதிவு செய்ய ஏதுவாக 25.07.2026 (சனி) மற்றும் 26.07.2026 (ஞாயிறு) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய வருவாய் வட்டாட்சியர்கள் அலுவலகத்திலும், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் அலுவலகம் மற்றும் லப்பைகுடிக்காடு, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சி செயல் அலுவலர்களின் அலுவலகங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே,, இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சுய கணக்கெடுப்பு பதிவேற்றம் செய்திட வேண்டும் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!