பெரம்பலூர் அருகே உள்ள காட்டு மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழா இன்று துவங்கியது.
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக எசனை – கீழக்கரை கிராம மக்கள் மட்டுமில்லாமல் சுற்று கிராம மக்கள் அனுக்கூர், வடக்கு மாதவி, கீழக்கரை, சோமண்டாபுதூர், இரட்டை மலை சந்து, பாப்பாங்கரை, அன்னமங்கலம், அரசலூர் கிராம மக்கள் உள்பட பல ஊர் மக்களும் கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு சித்திரை மாத திருவிழா கடந்த மே -7 அன்று பூச்சோரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த மே. 15 முதல் தொடர்ந்து தினமும் இரவில் காளை வாகனம், சிங்க வாகனம், மயில் வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட காட்டு மாரியம்மன் எசனை கீழக்கரை கிராம வீதிகளில் உலா நடைபெற்றது.
நேற்று மாவிளக்கு பூஜையும், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மொட்டை அடித்தல் போன்ற நேர்த்தி கடன் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று காலை சுமார் 10 மணிக்கு துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர்உலா வந்து, பின்னர் மாலை நிலையயை வந்தடைந்தது. இதனை தொடாந்து நாளை புதன்கிழமை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.