election-2016-police-training பெரம்பலூர் : தேர்தலில் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான தேர்தல் மேலாண்மை பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்திட காவல் துறையினர் பங்கு மிகவும் அளப்பரியது. எனவே தேர்தலில் பணியாற்ற உள்ள காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த தகவல்கள் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும். எனவேதான் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பு மனுதாக்கல் செய்யவரும் வேட்பாளர்களுடன் வேட்புமனு நடைபெறும் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் பகுதிக்குள மூன்று வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தரும் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களை மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதிக்க வேண்டும்.

அவ்வாறு வருகைதரும் பொழுது ஒலிப்பெருக்கி, பிரச்சாரம் உள்ளிட்டவைகளை காவல் துறையினர் அனுமதிக்க கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை தேர்தல் முடியும் வரை விடுவிக்ககூடாது.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி நிலையத்திலிருந்து 200 மீ தொலைவிற்குள் வாகனங்கள் செல்வதையும், அரசியல் கட்சியினரால் சுவரொட்டிகள், பேனர் வைத்தல் உள்ளிட்ட தேர்தல் விளம்பரங்களையும், 100 மீ தொலைவிற்குள் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்வதையும் தடுத்திட காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று வாகனங்களின் நடமாட்டம், மதுவிற்பனைகளை தடை செய்வது, தொழிலாளிகளுக்கு விடுமுறையினை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவிற்குப்பின் வாக்குப்பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அவைகளை பாதுகாப்புடன் எடுத்துச்சென்று சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைக்கு கண்கானிப்பு கேமராவுடன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும், என இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தனித்துணைஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்களுடன் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!