Modern Male Contraception Awareness Campaign: Flagged off by Collector at Perambalur.
பெரம்பலூர் மாவட்ட குடும்ப நலத்துறையின் சார்பாக ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை விழிப்புணர்வு முகாம் இரு வாரம் (21.11.2022 முதல் 04.12.2022 வரை) அனுசரிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்களுக்கான நவீன கருத்தடை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலான பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2022) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப நல நிரந்தர கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளியது. தையல் – தழும்பு – வலியின்றி ஒரு நிமிடங்களில் செய்யப்படும். அறுவை சிகிச்சை இல்லை. பாதுகாப்பானது. பக்கவிளைவுகள் இல்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஊக்கத்தொகையாக ரூ.1100/- ஊக்குவிப்போருக்கு ரூ.200/- அன்றே வழங்கப்படும் போன்ற விவரங்களை பொதுமக்களிடம் விளக்கி கூறி ஏற்படுத்தப்படவுள்ளது.
இதற்கான விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட துணை இயக்குநர் (பொ), குடும்பநலத்துறை மரு.சு.இளவரசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு சார்பில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களைப் போன்று அன்பு செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று முதல் 10 நாட்களுக்கு விழிப்புணர்வு கிராமியக் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மரு.அசோகன், துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட திட்ட மேலாளர் சு.சுமதி உட்பட எச்.ஐ.வி உடன் வாழ்பவர்களுக்கான தொண்டு நிறுவனம், நம்பிக்கை மையம், சுகவாழ்வு மைய ஆலோசகர்கள், ஆய்வக நுட்பர்கள், மாவட்ட குடும்ப நல செயலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.