On behalf of the Department of Transport, school – college vehicles, Perambalur Collector led audit today!


பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், தமிழ்நாடு அரசு பள்ளி வாகன ஆய்வுச் சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும், மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படும், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இயங்க முடியாத நிலையில் இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைவாக இருப்பதால், தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி, நெறிகாட்டு வழிமுறைகளுடன் இயங்கி வருகிறது.

அதன்படி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் சுமார் 400 பள்ளி வாகனங்கள், கலெக்டர் வெங்கடபிரியா, சி.இ.ஓ. ஆர்.அறிவழகன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் க.பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ. செல்வக்குமார், அடங்கிய குழு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை ஆயுதப் படை மைதானத்தில் ஆய்வு செய்தது.

அரசு விதிமுறைகளுக்குள் (பள்ளி பேருந்து வாகன சிறப்பு விதிகள் 2012ம் ஆண்டுப்படி) உட்பட்டு இயக்குவதற்கு தகுதியற்ற தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கு முதற்கட்ட தணிக்கை நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், வாகனங்களில் அவசர கால வெளியேறும் வழி, பள்ளி மாணவ, மாணவிகள் பாடப்புத்தக பைகளை வைக்க தனி வசதி, எளிதில் பேருந்தில் ஏறி இறங்கும் வகையில் படிக்கட்டின் உயரம், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் செல்போன் பேசிக்கொண்டு கண்டிப்பாக ஓட்டக்கூடாது மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில், முதற்கட்டமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தணிக்கை செய்யப்பபட்டது. மறு கட்ட தணிக்கை மற்ற வாகனங்களுக்கும் நடைபெறும். குறைபாடு உள்ள வாகனங்கள் தகுதிச்சான்று நீக்கம் செய்யப்பட்டு, குறைகள் சரி செய்தபின் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் க.பழனிசாமி தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்குழு உறுப்பினர்களாக உள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்து துறையினர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்கள், உதவியாளர்கள், பள்ளி மேலாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை சார்பில் விபத்தில் சிக்கியவர்கள் மீட்பதும், உரிய முதலுதவி செய்வது மற்றும் விபத்தால் வாகனத்தில் தீ ஏற்பட்டால் அணைப்பது உள்ளிட்ட பயிற்சிகளை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பயிற்சி அளித்தனர்.

கலெக்டர் வெங்கடபிரியா ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் ஆய்வு 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!