People block road near Perambalur demanding drinking water; Buses are in captivity!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே தொண்டபாடி கிராமத்தை அம்பேத்கர் தெரு பகுதிக்கு கடந்த சுமார் ஒரு வாரமாக குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதை சரி செய்ய கால தாமதமானதால், ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இன்று காலை வேப்பந்தட்டை- வி.களத்தூர் சாலையில் தொண்டப்பாடியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பெரம்பலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் பஸ்களை சிறை பிடித்தனர். இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி மற்றும் வி.களத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் அப்போது தெரிவித்ததாவது: தொண்டப்பாடியில் 4 குடிநீர் கிணறுகளுக்கு ஒரு டேங் ஆப்ரேட்டர் மட்டும் உள்ளார். எனவே, கூடுதலாக டேங் ஆபரேட்டர் நியமனம் செய்ய வேண்டும், உடனடியாக பழுது ஏற்பட்டுள்ள பைப் லைன் சரி செய்ய வேண்டும், உள்ளூரில் இருந்து கொண்டு சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வராத ஊராட்சி மன்ற தலைவர் மீது அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் பொதுமக்களின் கோரிக்கைகள் சரி செய்யப்படும். உடனடியாக குழாய் உடைப்பு பழுது நீக்கம் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வி.களத்தூர்- வேப்பந்தட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.