Perambalur: 2 young men killed in different accidents Police investigation !!
பெரம்பலூர் அருகே பைக் மீது, கண்டெயினர் லாரி மோதிய விபத்தில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல வேறு ஒரு விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய சம்பவத்தில், ஆலத்தூர் அருகே மற்றொரு வாலிபர் உயிரழந்தார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள இடையன் பால சிறுமத்தூரான் கிராமம் பஜனை மடத் தெருவைச் சேர்ந்த ரவி மகன் சரவணன் (29). இவர் பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு வேலையை முடித்து பைக்கில் பெரம்பலூர் நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அதே திசையில் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே வாலிபர் சரவணன் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவரின் சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்திற்கு காரணமான லாரியின் டிரைவரான உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த குமர்பால் மகன் பீம்சிங் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றர். இந்த விபத்தால், சற்று சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சீர் செய்தனர்.
இதே போல, அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிவராமபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கந்தசாமி ( 35 ). இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆலத்தூர்கேட் பகுதியில் உள்ள தனியார் மெக்கானிக் பட்டறை அருகே நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற கந்தசாமி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.