Perambalur accident near : 3 killed in Chennai persons

பெரம்பலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடியை சேர்ந்த ஜேம்ஸ்ராஜ், அவரது மனைவி மகாலட்சுமி, ஜேம்ஸ்ராஜ் தம்பி சவுரிராஜன், சவரிராஜனின் மனைவி ஜுலி மற்றும் ஜேம்ஸ்ராஜ் தங்கை ஆகிய 5 பேரும் ஒரு காரில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடக்கும் (இறந்து போன) உறவினர் ஒருவரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு காரில திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காரை சவுரிராஜன் ஓட்டி வந்தார். அப்போது கார் பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னே சென்ற ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி திடீரென வலது புறமாக திரும்பியது.

இதில் கார் லாரியின் பக்கவாட்டில் பயங்கர சத்தத்துடன் மோதியது. சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த சகோதரர்கள் ஜேம்ஸ்ராஜ், சவுரிராஜன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் விபத்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த ஷர்மிளா மற்றும் மகாலட்சுமி, ஜுலி ஆகியோரை விபத்தில் சிக்கிய காரில் இருந்து மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஷர்மிளா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகாலட்சுமி, ஜுலி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்கா திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் அலெக்ஸ்பாண்டியனை கைது செய்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!