Perambalur: Awareness campaign on child trafficking prevention and the eradication of tobacco products, organized by the District Police Boy’s Club.

பெரம்பலூர் மாவட்ட காவல் சிறுவர் மன்றத்தின் சார்பில் கவுதமபுத்தர் செவி மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான சிறப்புப்பள்ளியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு “குரு வந்தனமும் – வாழ்வியல் விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் குழந்தைக் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் லில்லி கோபிநாத் தலைமையில் நடந்தது.
பெரம்பலூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் சப் – இன்ஸ்பெக்டர் பி. மருதமுத்து, பெரம்பலூர் மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு ஆலோசகர் டாக்டர் வனிதா, புகையிலைக் கட்டுப்பாட்டு சமூக ஆலோசகர் தென்றல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சப் -இன்பெக்டர் மருதமுத்து பேசியதாவது: நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்தவர்கள் பெற்றோர் நம்மை நல்ல மனிதர்களாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். இவர்கள் இருவரையும் தெய்வத்திற்கு சமமாக மதித்து, அவர்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும். அவர்களை வணங்குவதும், மரியாதையுடன் பேசுவதும் நம் பண்பாடு. பொய் ஒரு தற்காலிக தப்பித்தலை தரலாம், ஆனால் நிரந்தர அவமானத்தைத் தரும். ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்ல வேண்டி வரும். உண்மை பேசுபவர்களையே அனைவரும் நம்புவார்கள், மதிப்பார்கள். நாவில் இருந்து வரும் வார்த்தைகள் அம்பை விட கூர்மையானவை. கடுஞ்சொல், கெட்ட வார்த்தைகள், மற்றவர்களை இழிவுபடுத்தும் சொற்கள் பேசக்கூடாது. இனிய சொல் பேசினால் அனைவரும் நண்பர்களாவார்கள். பிறர் மனம் நோகாமல் பேசுவதே உண்மையான நாகரிகம்.”உன் நண்பனைப் பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன்” என்பது பழமொழி. தீய பழக்கங்கள் உள்ளவர்களுடன் சேர்ந்தால் நாமும் கெட்டுப் போவோம். படிப்பில் ஆர்வம் உள்ள, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள நண்பர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். பயத்தில் இருக்கும் போதோ, ஆபத்தில் இருக்கும் போதோ, யாராவது துன்புறுத்தும் போதோ காவல்துறையினர் தான் நம் நண்பர்கள். காவலரைக் கண்டு பயப்படக்கூடாது. 100 என்ற எண்ணை அழைத்து உதவி கேட்கலாம். இன்றைய கல்வியே நாளைய வாழ்க்கையை தீர்மானிக்கும். ஒழுங்காக, கவனமாக, தினமும் படிக்க வேண்டும். நன்றாகப் படித்தால் தான் நல்ல வேலை, நல்ல எதிர்காலம் அமையும். இவை அனைத்தும் சேர்ந்தது தான் ஒழுக்கம். படிப்புடன் ஒழுக்கமும் இருந்தால் தான் ஒரு முழுமையான மனிதனாக முடியும் . என பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் பி.வனிதா பேசியதாவது: மாணவர்கள் சிறு வயதிலிருந்தே நல்ல உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் “நீங்களும் மருத்துவராகலாம்; நீங்களும் மாவட்ட ஆட்சியராகலாம்” என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் ஏற்படுத்தினார். செல்போனை தேவையின்றி அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. பெற்றோரை மதித்து, அவர்களின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். ஆசிரியர்கள் நமது இரண்டாவது பெற்றோர்கள்; அவர்களை மதித்து அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். புகையிலைப் பொருட்களை எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது. மது மற்றும் அனைத்து வகையான போதைப் பழக்கங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் வரும் தவறான மற்றும் தீய படங்கள், காணொளிகளைப் பார்க்கக் கூடாது. நல்ல இலக்கை நிர்ணயித்து, கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். நல்ல சிந்தனை, நல்ல பழக்கம், நல்ல நடத்தை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். “இன்றைய மாணவர்கள் நாளைய மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் சமூகத்தின் தலைவர்கள். எனவே, நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொண்டு, தீய பழக்கங்களைத் தவிர்த்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் உயர்ந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்” என பேசினார்.
காவல் உதவி எண்கள் அவசர அழைப்பு -100, குழந்தைகள் பாதுகாப்பு-1098, ஸ்டூடன்ஸ் ஹெல்ப் லைன்-14417, வுமன் ஹெல்ப் டெஸ்க் 112, சைபர் க்ரைம் 1930, வுமன் ஹெல்ப் லைன் 181,ட்ரக்ஸ் ஹெல்ப் லைன் 10581 போன்ற அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள், சிறுகதை புத்தகங்கள், கட்டுரை புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. “உங்களுக்கு எந்த உதவி தேவைப்படினும் எங்களை அழையுங்கள் காவல்துறை உங்களுக்கு கடமையாற்ற காத்திருக்கின்றது” என தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல் சிறுவர் மன்ற மாணவர்களுள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட காவல் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் சாரண ஆசிரியர் சி இரவிச்சந்திரன் தொகுத்து வழங்கியும், இனிப்புகள் வழங்கியதுடன் நன்றி கூறினார்.









kaalaimalar2@gmail.com |
9003770497