Perambalur: Barbershop workers’ union protest, pressing for 6-point demands, including not granting permission to corporate salons!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் அடைத்து வைத்து கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் இன்று காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அச்சங்கத்தின் மாநில இணைச் செயலாளர்கள் எசனை ராஜ்மோகன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில இணை செயலாளர் எஸ்.கே.ராஜா, ஆதி மருத்துவ சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மருத்துவர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டியும், மருத்துவர், நாவிதர் சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளது. இந்த பிரிவில் ஆதிக்க சாதி பிரிவினர் உட்பட 100 சாதி பிரிவினர் உள்ளனர். இதனால் எவ்வித பயனும் இல்லை. எனவே, வாய்ப்பில் 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். குறிப்பாக, அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தை குலத் தொழிலாகத் கொண்ட மருத்துவர் சமூக மாணாக்கர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் செவிலியர், துணை செவிலியர் பணியிடங்களில் மருத்துவர் சமூக மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். 1970 ஆம் ஆண்டு வெளியான சட்டநாதன் குழு அறிக்கையின் படி மருத்துவர், நாவிதர் சமுதாயம் சார்ந்த உட்பிரிவு சாதிப் பெயர்களை நீக்கி மருத்துவர் என்ற ஒரே பெயராக சாதிச் சான்று வழங்கவும், ஒடிசா, ஆந்திரா, மாநில அரசுகள் வழங்கியது போல் இந்து மருத்துவர் சமூகத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு அறநிலையத் துறைக்கு உட்பட்டு இருக்கும் திருக்கோவில்களில் பணிபுரியும் முடிதிருத்தும் தொழிலாளர்களையும், நாதஸ்வரம், தவில் இசைக் கலைஞர்களையும், அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். முடி காணிக்கை செலுத்துபவர்களின் பக்தர்களின் முடியை முடி எடுக்கும் தொழிலாளிக்கு முடி சொந்தம் என்று அறிவிக்க வேண்டும்.
மேல்சபை உறுப்பினர்களான அரசியல் பிரதிநிதித்துவம் மருத்துவர் சமூகத்திற்கு முன்பு இருந்தது. தற்போது கிடையாது. எனவே, முடிதிருத்தும் தொழிலாளர் நல வாரியத்தில், மருத்துவர், நாவிதர், சமுதாயம் சார்ந்தவர்களையே தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
நலவாரியத்தில் வழங்கப்படக்கூடிய உதவி தொகைகளையும் ஓய்வூதியம் தொகையையும் உயர்த்தி தரவேண்டும். முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிறைய பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி தொழிலாளர்கள் பாதிப்பு அடைகிறார்கள். எனவே, தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவமயிைல் 6 மாதத்திற்கு ஒரு முறை முழு இலவச உடல் பரிசோதனையும் வழங்குவதோடு இலவச மருத்துவ காப்பீடு ரூ. 5 லட்சம் வரை உயர்த்தி வழங்க வேண்டும்.
பாரம்பரியமாக முடிதிருத்தும் தொழில் ஒன்றையே நம்பி வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற வகையில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் சலூன்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497